யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய இலகுவான வழி

 கூகுளின் யூடியூப் என்பது மிகப்பிரபலம் பெற்ற இணையத்தளமாகும். இதில் பல இலட்சக்கணக்கான வீடியோக்கள் தரவேற்றப்பட்டுள்ளன. இவற்றை நாம் இலவசமாக கண்டுகளிக்க முடியும்.

இதில் இல்லாத வீடியோக்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு பழையவை முதல் புதியவை வரை அனைத்தும் உள்ளன. இவற்றில் சிலவற்றை எமக்கு தரவிறக்கம் செய்து கொள்ள ஆர்வமிருக்கும். இவற்றிற்காக நாம் சில மென்பொருட்களை உபயோகப்படுத்துவது வழக்கம்.

அவ்வாறு நாம் தரவிறக்கும் காணொளிகள் FLV என்ற வடிவத்திலேயே கிடைக்கும். இவற்றை பின்னர் நாம் நமக்கு தேவையான வடிவத்திற்கு மாற்றிக் கொள்வது வழக்கம்.

ஆனால் வேறு எந்த மென்பொருட்களின் துணையுமின்றி மிக இலகுவாக Mp3, Mp4, FLV வடிவத்தில் யூடியுப் வீடியோவின் கீழ் தோன்றும் பட்டனின் உதவியுடனேயே தரவிறக்கம் செய்யமுடியும்.
தரவிறக்கம் செய்து கொள்ள....
பயர்பொக்ஸ் பாவனையாளர்கள்
குரோம் பாவனையாளர்கள்

கணினியை பேக்கப் செய்ய / மீட்க அவசியமான மென்பொருள் Easeus Backup

கணினியைப் பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பாக வைத்திருப்பதில் தான் சிரமப்பட வேண்டியிருக்கிறது. திடிரென்று வைரஸ் தாக்குதலின் காரணமாக கணினியில் உள்ள கோப்புகளை இழக்க வேண்டியிருக்கும். கணினி கிராஷ் ஆகி பூட்டிங் ஆக மறுக்கும். மறுபடியும் விண்டோஸ் நிறுவ வேண்டியிருக்கும். சில கணினிகளில் ஹார்ட் டிஸ்க் செயல் இழந்து மொத்தமாக எல்லா கோப்புகளையும் தொலைக்க வேண்டி வரும். நம்மில் எத்தனை பேர் கணினியை பேக்கப் செய்து வைக்கிறோம்? 20 சதவீதம் பேர் தான் பேக்கப் என்ற வேலையைச் செய்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.


Easeus நிறுவனத்தின் இலவச மென்பொருளான Todo Backup இந்த பேக்கப் செய்யும் வேலையை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் செய்து கொடுக்கிறது. கணினியின் அத்தனை கோப்புகளையும் இல்லை முக்கியமான எந்த வகை கோப்புகளாக இருந்தாலும் ஒரு கிளிக்கில் பேக்கப் செய்து தருகிறது. கோப்புகள் தொலைந்து போனாலோ அல்லது அதன் முந்தைய வடிவம் (Previous versions) வேண்டுமானாலும் மீட்டுத்தருகிறது. இது கணினி வைத்திருப்பவர்கள் அவசியம் பயன்படுத்த வேண்டிய மென்பொருளாகும்.




இந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள் :



1. கணினியை முழுவதுமாக பேக்கப் எடுக்க உதவுகிறது. இதில் இயங்குதளம், நிறுவப்பட்ட பயன்பாடுகள் போன்றவையும் அடங்கும். இதனால் கணிணி கிராஷ் ஆகி செயல்பட மறுத்தால் பேக்கப் செய்யப்பட்ட டிஸ்கின் மூலம்
மொத்தத்தையும் மீட்க முடியும்.


2. குறிப்பிட்ட கோப்புகள் மற்றும் போல்டர்களை பேக்கப் எடுக்கும் வசதி இருக்கிறது.


3. Incremental Backup – இதன் சிறப்பம்சம் என்னவென்றால் முழுதாக பேக்கப் செய்யும் போது ஒவ்வொரு முறையும் தனித்தனியாக சேமிக்காமல் கடைசியாக செய்யப் பட்ட பேக்கப்பில் இல்லாமல் புதியதாக வந்திருக்கிற கோப்புகளை அதனுடனே சேர்த்து வைத்து விடுகிறது.


4. இதிலிருந்து சிடி, டிவிடி, பென் டிரைவ் போன்ற கருவிகளில் எளிதாக பேக்கப் இமேஜ் கோப்புகளை கடவுச்சொல் கொடுத்து சேமிக்க முடியும்.


5. Backup Schedule – இதில் பேக்கப் எப்போது தானாக நடைபெற வேண்டும் என அமைத்துக் கொள்ள முடியும். மேலும் பேக்கப் கோப்புகள் வேண்டாம் என்றால் அழித்து விட முடியும்.




6. பேக்கப் செய்யப்பட்ட இமேஜ் கோப்பை எளிதாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில் (Mount Image) பார்த்து தேவையானதை மட்டும் மீட்டுக் கொள்ள முடியும்.


7. தற்போதைய ஹார்ட் டிஸ்கின் அனைத்தையும் நகலெடுத்து (Disk clone) மற்றொன்றுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.




தரவிறக்கச்சுட்டி : Download Easus Todo Backup

வானம்

பிறர் நலனுக்காக வாழச் சொல்லும் அழுத்தமான கதை. ஐந்து பிரச்சினைகளை வெவ்வேறு கதை களத்தில் நகர்த்தி கிளைமாக்சில் ஒரே புள்ளியில் இணைத்து இதயங்களை கனக்க வைக்கிறார் இயக்குனர் கிரிஷ்...
 
கேபிள் டி.வி. நடத்தும் சிம்பு பணக்கார வாழ்வுக்கு கனவு காண்கிறார். கோடீஸ்வர பெண்ணை ஏழை என்பதை மறைத்து காதலிக்கிறார். அவளுக்காக புத்தாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க நாற்பதாயிரம் ரூபாயை திருட துணிகிறார்.
 
நன்றாக படிக்கும் சரண்யா மகனை கந்து வட்டிக்காரன் இழுத்து போகிறான். கிட்னியை விற்று அவனை மீட்க சரண்யா பட்டணத்து ஆஸ்பத்திரிக்கு வருகிறார்.
 
ராப் இசை போட்டியில் பங்கேற்க பெங்களூரில் இருந்து சென்னை வரும் பரத்-வேகா ஜோடி விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு அதே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருகின்றனர்.
 
விபசார தொழில் செய்யும் அனுஷ்காவும் கத்தியால் குத்துப்பட்ட தோழியை காப்பாற்ற அங்கு அழைத்து வருகிறார். அதே ஆஸ்பத்திரியில் கிட்னி விற்ற பணத்தை வைத்துக்கொண்டு சிகிச்சை பெறும் சரண்யாவிடம் தொகையை சிம்பு திருடிக் கொண்டு ஓடுகிறார்.
 
இன்னொருபுறம் நேர்மையான பிரகாஷ்ராஜை தீவிரவாதி என போலீஸ் பிடித்து ஆஸ்பத்திரியில் வைக்கிறது. அந்த ஆஸ்பத்திரியை தகர்க்க தீவிரவாதிகள் வெடிகுண்டு துப்பாக்கிகளுடன் ஊடுருவுகின்றனர்.
 
அதன்பிறகு நடப்பவை இதயங்களை உலுக்கிபோடும் கிளைமாக்ஸ்...
 
சிம்பு ஹீரோயிசத்தை மூட்டை கட்டி விட்டு யதார்த்தத்தில் மனதை கெட்டியாக பிடிக்கிறார். காதலிக்காக பணம் திருட போய் போலீசில் மாட்டி படும் அவஸ்தைகள் ரகளை.
 
ஏழைப் பெண்ணிடம் பணத்தை பிடுங்குவது உதறல். பிறகு மனம் திருந்தி அப்பணத்தை ஆஸ்பத்திரி வார்டு அறையின் முன் போட்டு விட்டு மறைந்து நின்று பார்க்கும்போது விழிகளில் நீர்முட்ட வைக்கிறார்.
 
சுயநலவாதியாக வரும் பரத் உதாசீனம் செய்த டிரைவரால் தான் காப்பாற்றப்படுவதில் மனம் மாறுவது அழுத்தம். மகன் படிப்புக்காக கிட்னி விற்கும் சரண்யாவும் அவருடன் வரும் கிழவரும் ஜீவன் பாய்ச்சுகின்றனர்.
 
விலை மாதுவாக அனுஷ்கா கவர்ச்சி படையலிடுகிறார்.பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால் கேரக்டர்களும் கச்சிதம். சந்தானம் வி.டி.வி. கணேஷ் சிரிக்க வைக்கின்றனர். ஆரம்ப சீன்கள் வலுவின்றி நகர்கின்றன. பாதிக்குப் பின் விறுவிறுப்புக்கு மாறுகிறது.
 
ஆஸ்பத்திரியில் நோயாளிகளை காப்பாற்ற சிம்பு, பரத் போராடுவது பதை பதைக்க வைக்கிறது. யுவன்சங்கர் ராஜா இசை, ஞானசேகர், நீரவ்ஷா ஒளிப்பதிவு பக்கபலம்.

அழகான உதடுகளுக்கு

முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர மாதக் கணக்கில் ஆகும். சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும் காணப்படுகின்றன. உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்...

பொதுவான ஆலோசனைகள்

தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.

வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.

உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.

மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும்.

தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.

லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.

லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.

தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும்.

இரண்டு டீஸ்பூன் ஆலிவ் என்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும்.

கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.

உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க பேஸ் வாஷ் அல்லது தேங்காய் என்ணெயை உபயோகிக்கலாம்.

லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும். உதாரணத்திற்கு வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும்.

உதடுகளுக்கு மேக்அப் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் : முதலில் பவுண்டேஷன் தடவிவிட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

லிப்ஸ்டிக் உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் லிப் சால்வ் உபயோகிக்கலாம். அதே மாதிரி பல வண்ண நிறங்களில் இப்போது வாசலின் வந்துள்ளது. அதையும் உபயோகிக்கலாம்.

லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.

லிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்

முதுகுவலிக்கு வீட்டு வைத்தியம்


இன்றைய அவசர யுக வாழ்க்கையில் முதுகுவலி பிரச்சனை என்பது அநேகமாக பெரும்பாலானோர் சந்திக்க கூடியதாகவே உள்ளது. வயதானவர்கள் மட்டுமல்லாது நடுத்தர, அவ்வளவு ஏன் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்யும் இளவயதினர் கூட இந்த முதுகுவலிககு தப்புவதில்லை. நமது உடலின் பெரும்பாலான எடையை முதுகுதான் தாங்குகிறது என்பதால், அதிக உடல் பருமன உடையவர்களுக்கு இப்பிரச்சனையின் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும்.சரியான நிலையில் உட்காரமல் இருப்பது, உடற் பயிறசி இல்லாமை, அளவுக்கு அதிகமான மன அழுத்தம், தசை இறுக்கம் போன்றவை முதுகுவலிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஆனாலும் இந்த முதுகுவலிக்கான நிவாரணமும், அதிலிருந்து விடுபடவுமான சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள் இங்கே:

நீங்கள் அதிக உடல் பருமன் உடையவராக இருந்தால், முதலில் உங்களது அதிகப்படியான எடையை குறையுங்கள்.அப்படி செய்தால்தான் உங்களது முதுகிற்கு கூடுதல் அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
முதுகுவலி ஏற்படும் சமயங்களில் பூண்டு போட்டு காய்ச்சிய எண்ணெய் அல்லது யூக்கலிப்ட்ஸ் தைலம் போட்டு நன்கு மசாஜ் செய்யுங்கள்.
ஒரு மேஜைக்கரண்டி தேனை வெது வெதுப்பான நீரில் கலந்து குடித்தாலும் முதுகுவலி குறையும்.
வைட்டமின் சி பற்றாக்குறையும் முதுகுவலிக்கு ஒரு முக்கிய காரணமாகும். எனவே உங்களது உணவில் வைட்டமின் சி சத்து அடங்கிய பால், முட்டை, கீரை போன்ற உணவுகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உப்பு கலந்த சுடு நீரில் ஒரு டவலை நனைத்து பிழிந்து, அதனை முதுகில் ஒத்தடம் கொடுக்க வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
 ஒரே நிலையில் (position) தொடர்ந்து பல மணி நேரம் இருப்பதை தவிருங்கள். நேராக நிமிர்ந்து உட்காருங்கள். கூன் போட்டு உட்காராதீர்கள்.சரியான நிலையில் உட்காராமல் இருப்பதும் முதுகுவலியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

கணனியின் IP முகவரியினை புதுப்பிக்க புதிய முறை


நீங்கள் இன்டர்நெட்டில் ப்ரௌசிங் செய்து கொண்டிருக்கும்போது திடீரென “Page not found” என error message வருவதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம்.

நீங்கள் உங்கள் மொடம் உட்பட எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை ஏற்படுத்தி என்ன நேர்ந்தது என கேட்க ஆரம்பிப்பீர்கள்.

இவ்வாறான நிகழ்வுகள் உங்கள் கணணியின் Internet Protocol (IP) முகவரியினை புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்படுவதால் நிகழுகின்றது. கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகள் எவ்வாறு IP முகவரியினை புதுப்பிப்பது என்பதை விளக்குகிறது.

வழிமுறைகள்

strat button இல் க்ளிக் செய்து Run என்பதை தெரிவு செய்யுங்கள்.

Type “cmd” in the box and click on “OK.” விண்டோவில் உடனடியாக கட்டளை ஒன்று தென்படும். இது பழைய DOS operating system இனை ஒத்திருக்கும்.

Type “ipconfig /release” and press “Enter இது உங்கள் கணணியின் தற்போதைய IP முகவரியினை வெளியிடும்.

Type “ipconfig /renew” and press “Enter.” இது புதிய IP முகவரியினை ஒப்படைக்கும்.

Type “Exit” and press “Enter” பின்னர் உங்கள் விண்டோ close செய்யப்படும். தற்போது உங்கள் கணணி புதிய IP முகவரியினைப் பெற்றிருக்கும்.

பயர்பாக்ஸ் உலவியின் வேகத்தைக் குறைக்கும் 9 நீட்சிகளின் பட்டியல்


பயர்பாக்ஸ் உலவி இணைய உலகில் பலரால் விரும்பப்படுகிறது. இதன் சிறப்பான தோற்றம், வேகம், எளிமை, அதிக அளவிலான நீட்சிகள், எந்தவொரு இணைப்பையும் கையாளும் தன்மை போன்றவை சிறப்பம்சங்கள். ஆனாலும் பயர்பாக்ஸ் கணிணியில் முதன் முதலாக திறக்கப்படும் போது கொஞ்சம் வேகம் குறைவாகத் தான் இருக்கும். இதற்குக் காரணம் ஆட் ஆன்கள் (Firefox Add ons) அல்லது நீட்சிகளை அதிகமாகப் பயன்படுத்துவது தான். நீட்சிகள் என்பவை வலை உலவியில் இணையம் பயன்படுத்தும் போது மேம்பட்ட சில வேலைகளைச் செய்ய உதவுகின்றன. 

நீட்சிகளை அதிகமாகப் பயன்படுத்தும் போது பயர்பாக்சின் வேகத்தை (Slow Performance) மட்டுப்படுத்துகிறது. ஒரு சிலர் எதற்கென்றே தெரியாமல் பல நீட்சிகளை வைத்திருப்பார்கள். மேலும் சில நீட்சிகள் பயர்பாக்சில் இணையத்தையே பயன்படுத்த முடியாமல் போகுமளவுக்குச் செய்து விடுகின்றன. இதனால் வலைத்தளங்கள் வேகமாக லோடு ஆகாமல் மெதுவாக சுற்றிக் கொண்டே இருக்கும்.

பயர்பாக்ஸ் நிறுவனம் பயர்பாக்சின் வேகத்தையும் திறனையும் குறைக்கும் 9 நீட்சிகளின் பட்டியலைக் கொடுத்துள்ளது.

1. Firebug
2. SimiliarWeb
3. FoxLingo
4. FoxyTunes
5. Personas Plus
6. FoxClocks
7. video Download Helper
8. FastestFox
9. Feedly


இந்த நீட்சிகளை உங்கள் பயர்பாக்ஸ் உலவியில் பயன்படுத்தி வந்தாலோ அல்லது நிறுவியிருந்தாலோ அதனை Disable செய்து விடுங்கள். இதற்கு Firefox Menu -> Tools -> Addons சென்றால் உங்கள் உலவியில் இருக்கும் நீட்சிகளின் பட்டியல் தெரியும். இவை தேவையில்லை என்றால் சுத்தமாக Delete கொடுத்து அழித்து விடவும்.

விண்டோஸ், மேக், பெடோரா உள்ளிட்ட இயங்குதளம் வாரியாக வேகத்தைக் குறைக்கும் நீட்சிகளின் பட்டியலை பயர்பாக்சின் இணையதளத்தில் அறியலாம்.
https://addons.mozilla.org/en-US/firefox/performance/
 

மருந்துவ குணங்கள் பொருந்திய எலுமிச்சை

எலுமிச்சை கனியில் விட்டமின். சி உயிர்சத்து அதிகம் உள்ளது. அத்துடன் சுண்ணாம்பு சத்தும், பாஸ்பரசும் அதிக அளவில் உள்ளன. இது உடல் உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் பெற்றது. தினமும் ஒரு எலுமிச்சை பழம் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடல் திறனை வலுப்படுத்துகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருள்

எலுமிச்சையில் அதிக நீரும், 30-க்கும் மேற்பட்ட எளிதில் ஆவியாகும் எண்ணெய் பொருட்களும் உள்ளன. இதில் ஆல்கஹால்கள், அல்டிஹைடுகள், எஸ்டர்கள், ஹைடிரோகார்பன், கீட்டோன்கள், ஆக்ஸைடுகள், சிட்ரிக் அமிலம், சிட்ரால் டெர்பினால்கள் போன்றவை உள்ளன.

தூக்கமின்மையை போக்கும்

வயிறு தொடர்புடைய கோளாறுகளை குணமாக்கும். மலச்சிக்கலையும் நீக்கும். பித்த காய்ச்சல், கிறுகிறுப்பு, வாந்தி போன்ற தொல்லைகளைப் போக்கும். வாய், வயிறு, போன்ற இடங்களில் ஏற்படும் புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப்போக்கும்.

பற்களுக்கு பலத்தை அளிக்கும். கண்நோய்களை குணமாக்கும் சக்தியும் இதற்கு உண்டு. தூக்கமின்மையை போக்கி ஆழ்ந்த நித்திரையை கொடுக்கும்.

தோல் வறட்சியை போக்கும். சருமம் மிக மிருதுவாக இருக்க இதன் சாறு உதவுகிறது. உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் கோளாறை சரி செய்யும் ஆற்றல் உண்டு.

பூச்சிக் கடிகளில் இருந்து காப்பாற்றும் மருந்து

விஷத்தை முறிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. தேள் கொட்டி விட்டால் கொட்டிய இடத்தில் ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தை தேய்க்க விஷம் இறங்கும்.

கொசுக் கடித்த இடத்தில் எலுமிச்சை சாற்றினை பூசினால் எரிச்சல் குணமடையும். இரவில் தூங்கும் முன் சாற்றினை பூசினால் கொசுக்கடியில் இருந்து தப்பலாம்.

கிருமிகளுக்கு எதிரானது

பொதுவாகவே இயற்கையில் விளையும் கனிகள் மருத்துவ குணம் உடையவை. எலுமிச்சைக்கு அதில் முதலிடம். இது கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு நோய் வராமல் தடுக்கின்றன. எலுமிச்சையில் உள்ள சாற்றில் சிட்ரிக் அமிலம் என்னும் முக்கிய பொருள் உள்ளது. இது வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி என்னும் நோயை குணப்படுத்த உதவுகிறது. பசியை தூண்டுகிறது. ஜீரணத்தை எளிதாக்குகிறது. வாந்தி, வயிற்று வலி நோய்களை குணப்படுத்தும்.

நுரையீரல் நோய்கள்

எலுமிச்சை கனியின் சாறு தாகத்தினை தீர்த்து எரிச்சலைப்போக்கும். நாடு விட்டு நாடு செல்பவர்களுக்கும், கப்பல் பயணத்திற்கும் மிகவும் உதவும். நுரையீரல் நோய்களை போக்கும். எலுமிச்சை சாறுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து கொப்பளித்தால் ஈறு மென்மையாதல் மற்றும் வைட்டமின் சி குறைவினால் ஏற்படும் வாய்ப்புண்கள் குணமடையும். எலுமிச்சை சாற்றின் பானம் நீரிழிவு நோயாளிகளின் தாகத்தை தீர்க்கும் ஆற்றல் கொண்டது.

எலுமிச்சை ஊறுகாய்

அனைத்து வீடுகளும் இருக்கக்கூடிய அத்தியாவசிய உணவுப்பொருள் எலுமிச்சை ஊறுகாய். இது கணையப் பெருக்கம் தொடர்பான நோய்களை குணப்படுத்த உதவுகிறது

அட்சய திருதியை

அட்சய திருதியை ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்கு மூன்றாம் நாள் வரும். அன்று திருத்தலங்களுக்குச் சென்று இறையருள் பெறுவதால் வாழ்வு நலம் பெறும். அன்று, நல்லது எது செய்தாலும் ஒன்றுக்கு மூன்றாக இறைவன் பலன் கொடுப்பார் என்பர். ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் - மே மாதம் அட்சய திருதியை தினம் கொண்டாடப்படுகிறது.

க்ஷயம் என்றால் தேய்தல், குறைந்து போதல், மறைதல் எனப் பல பொருள் உண்டு. அக்ஷயம் என்றால் வளர்தல், நிறைதல் என்று பொருள். திருதியை என்றால் மூன்றாவது நாள் என்பதாகும். திதி என்பது நாள். தினம் என்று பொருள். திதி (நாட்கள்)களில் சிறப்பு பெற்றது. அட்சய திருதியை என்று மகாகவி காளிதாசர் தாம் அருளிய உத்திர காலாமிருதம் என்ற நூலில் கூறியுள்ளார். அட்சயம் என்றால் வளருதல் எனப்படுவதால் அள்ள அள்ள வளர்ந்து கொண்டது அட்சய பாத்திரம். அதுபோல் அட்சய திருதியை என்பது செல்வத்தினை மேன்மேலும் வழங்கக்கூடிய நாள். அட்சய திருதியையன்று நாம் பூஜிக்க வேண்டிய முக்கிய கடவுள்கள் மஹா விஷ்ணு, மஹா லக்ஷ்மி, பரமசிவன், பார்வதி, அன்னப்பஞ்சம் போக்கும் அன்னபூரணி, கல்விச் செல்வம் தரும் கலைமகள், குறையற்ற நிதியம் தரும் குபேரன் போன்றவர்கள். அட்சய திருதியையன்று பொன்னும் பொருளும் வாங்கி, பூசைகள் செய்து இறைவனை வணங்கினால் நன்மை உண்டாகும் எனக் கூறப்படுகிறது.

இனி இறைவர்களோடு அட்சய திருதியைக்குத் தொடர்புள்ள சில புராணச் செய்திகளைச் சுருக்கமாக நோக்குவோம். சிவமும், சக்தியும் இணைந்த சிவ சக்தியாக மக்கள் வழிபடுகிறார்கள். கிருஷ்ணபட்சத்தை அதாவது அமாவாசை யாகத் தேய்ந்து போய்க் கொண்டிருந்த சந்திரன், வளர்பிறையாக மாறக் காரணமான சிவன் ஆசியளித்தது தினமானது அட்சயம் என்ற சொல்லுடன் இணைந்து அட்சய திருதியையாகச் சிறப்புற்றது. மஹாலக்ஷ்மி, மஹா விஷ்ணுவின் மார்பில் இடம் பிடித்த தினம் வளர்பிறை திருதியை தினத்தில் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. மேலும், குசேலர் சரித்திரத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் பால்ய தோழர் குசேலர், கிருஷ்ருக்கு அவல் அளித்தார். அட்சயம் என்று சொல்லிவிட்டு அவலை கண்ணன் சாப்பிட்டார். இதன் காரணமாக அஷ்டலக்ஷ்மிகளும் குசேலர் வீட்டிற்கு வந்ததாகக் கதை. இந்தச் சம்பவம் நடந்தி தினம் அட்சய திருதியை தினத்தன்று தான் என்று கூறப் படுகிறது. ஆகவே அன்று குசேலர் சரித்திரத்தைப் படித்தால் குடும்பத்தில் வறுமை நீங்கும் என்பது ஐதிகம்.

மஹாபாரதத்தில் துச்சாதனன் இராஜ சபையில் பாஞ்சாலியின் துகிலை உரிய ஆரம்பித்தவுடன், பாஞ்சாலி, தன் மானம் காக்கக் கதறி அழுதாள். அவளுடைய அபயக் குரல் கேட்ட கண்ணன், அங்கேயே இருந்து அட்சயம் என்று சொன் னான். திரௌபதியின் புடவை குறையில்லாமல் வளர்ந்தது. இந்தச் சம்பவம் நடந்ததும் திருதியை தினம்தான் என்று இதிகாசம் கூறுகிறது. எனவே அன்று புதிய ஆடை வாங்குவது சிறப்பாகக் கருதப்படுவதால் இன்றும் இப்பழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது. அகிலத்திற்கும் அன்னையாக விளங்கும் அன்னபூரணி உலகிற்கு அன்னம் அளிக்க ஆரம்பித்த தினம் ஒரு திருதியை தினம். எனவே அட்சய திருதியை தினத்தன்று உணவுப் பொருட்கள் வாங்குவது ரொம்ப சிறந்ததாம். பாண்டவர்கள் காட்டில் இருந்த சமயம், அன்ன பஞ்சம் தீர்க்க, கண்ணன் அட்சய பாத்திரம் அளித்த தினமும் திருதியை தினம்தான். குபேரன் சிவனருளால் சகல ஐஸ்வரியத்தை அடைந்த தினமும் இதுதான். இதுபோன்று இன்னும் பற்பல நிகழ்ச்சிகள் நடந்த தினம் அட்சய திருதியை தினம்தான்.

இனி அட்சய திருதியை தினத்தில் செய்ய வேண்டிய பூசை முறைகளைச் சுருக்கமாக நோக்குவோம். அந்நாளில் அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்து, பூசை அறையில் கோலம் போட வேண்டும். லக்ஷ்மிநாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் (அவரவர்கள் விருப்பப்படி) படங்கள் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, பூமாலைகள் சாற்றவேண்டும். குத்துவிளக்கு அல்லது காமாக்ஷி விளக்கு ஏற்றி வைக்கவும். பின்னர் கோலத்தின் மீது பலகை வைத்துக் கோலம் போடவும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயங்கள், பொன், வெள்ளி, சிறிய நகைகள் போடவும். அதற்கு சந்தனம், குங்குமம் இடவேண்டும். அதன்மீது மஞ்சள் பூசிய தேங்காயை மாவிலை கொத்து நடுவில் வைத்து, கலசம் தயார் செய்து பலகை மீது வைக்கவும். இதற்கு முன் கோலம் போட்டு நுனி வாழை இலையில் அரிசியைப் பரப்பி, அதன்மீது விளக்கு ஏற்றி வைக்கவும். பின்னர் மஞ்சள் பிள்ளையார் பிடித்துக் குங்குமம் இட்டு பூ போடவும். பொன், பொருள், புத்தாடைகள் வாங்கி இருந்தால் கலசத்திற்கு அருகில் வைக்கவும். அர்ச்சனைகள் முடிந்த பிறகு தூபம், தீபம் காட்டி, பால் பாயாசம் நைவேத்யம் செய்யலாம்.

இவ்வாறு பூசை செய்தால் அளவற்ற பலன்கள் கிடைக்கும் என்பர். அட்சய திருதியை தினத்தில் நாம் செய்யும் நற்செயல்கள் எல்லாம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது. அன்றைய தினம் செய்யப்படும் தானங்கள், பித்ரு காரியங்களுக்குப் பல ஆயிரம் பலன்கள் உண்டாகும். அதாவது அட்சய திருதியை அன்று ஏழைகளுக்கு ஆடை தானம், அன்னதானம் செய்வது, கோடை காலமாக இருப்பதால் நீர் மோர், பானகம் முதலியன கொடுக்கலாம். ஏழை, வசதியற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி செய்தால் நல்லது. இவ்வாறு செய்வதால், குடும்பத்தில் பிணி நீங்கி, உடல் ஆரோக்கியம் சிறக்கும். மனக் கஷ்டம் நீங்கிக் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மேலும், குடும்பத்தில் திருமணம், சந்தான பாக்யம் நிகழும் என்பர்.

இத்தகைய சிறப்புமிக்க அட்சய திருதியையில் நாமும் பொன், பொருள், புத்தாடை வாங்கி மகிழ்ந்தது, இறைவனை வழிபடுவோம்.

டீன் – ஏஜ் மகளிடம் அப்பா எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்!

பிள்ளைகளிடம் தலையீட்டிற்கும், அக்கறைக்கும் இடைப்பட்ட ஒரு நடு நிலையை அப்பாக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
சிலர் தன் டீன் – ஏஜ் மகளை எப்பொழுதும் நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். “சொல் பேச்சை கேக்குறதில்லை எதை எடுத்தாலும் வாதம் பண்ணிக்கிட்டே இருக்கா” என நச்சரிப்புக்குக் காரணம் கூறுவார்கள்.

அவர்கள் எதையும் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புகிற மனிதராக இருந்தாலும் அவர்களுடைய இந்த அணுகுமுறை தன் மகளிடம் ஒரு பாதகமான போக்கை உருவாக்கும் என்று அவர்களுக்குத் தெரியாது.

டீன் – ஏஜ் என்பது ஒரு சிக்கலான பருவம். இதை அப்பாக்கள் உணர்வதில்லை. அவருடைய ஆத்திரமும், இயலாமையும் அவர்களது வீட்டின் நிம்மதியைப் பெரிதும் குலைக்கின்றது.

உங்களுடைய பிள்ளைகள் கைக்குழந்தை நிலையிலிருந்து தத்தித் தவழும் பருவத்தை எட்டிய அந்த கால கட்டத்தை நினைத்துப் பாருங்கள். மெல்ல பரிணமித்த அவள் குணாதிசியங்களுக்கேற்ப (ஆளுமை) நீங்கள் தாம் அப்பொழுது உங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.

அவளுடைய அழுகைகளுக்கும், ஆட்டங்களுக்கும் காரணம் புரியாமல் அப்பொழுது நீங்கள் கொஞ்சம் எரிச்சல் கூட அடைந்திருக்கலாம்.

டீன் ஏஜ் பருவம் என்பது கூட அத்தகைய ஒருபருவ மாறுதல்தான். இந்தக் காலகட்டத்தில் உங்கள் மகள் வேகமாக வளர்கிறாள். இவ்வளர்ச்சி உடல், அறிவு மற்றும் உணர்வு ரீதியானது.
இந்த வயதில் அவள் பாதி பெரியவள் என்பதை மறந்துவிட வேண்டாம். அதனால்தான், ஒரு குழந்தையாக நடத்தப்படும்போது அவளைப் புண்படுத்துகிறது.

உங்களை அறியாமல் நீங்கள் அவளுடைய தன்னம்பிக்கையை காயப் படுத்தக் கூடும். “என்னுடைய வாழ்க்கையை என்னாலேயே திறம்பட நடத்த முடியும் என்கிற போது இவர்கள் ஏன் தேவையின்றி இடையே புகுந்து அறிவுரைகள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்?” என்று அவள் நினைப்பாள்.

உங்கள் ஆணைகளும், கட்டளை களும் தன்னை ஒரு குழந்தைபோல் உணர வைப்பதால் அவற்றை வெறுக்கிறாள்.

இந்த வயதில் தன்னுடைய அந்தரங்கமானவைகளை கட்டிக் காப்பவளாகவும், அதை வெளியில் சொல்ல விரும்பாதவளாகவும் இருப்பாள்.

“எங்கே போனாய்?”, “என்ன செய்தாய்“ போன்ற கேள்விகளை அவள் விரும்புவ தில்லை வளர்ந்துவிட்ட ஒரு நபர் மீது நீங்கள் வைக்கக்கூடிய நம்பிக்கையை ஏன் தன்மீது வைப்பதில்லை என்று சலித்துக்கொள்வாள்.

ஏனென்றால், அப்பொழுது அவளைப் பொறுத்தவரை நன்கு வளர்ச்சியடைந்து விட்ட ஒரு பெண் இந்த வயதில் தன்னை சுயசோதனைக்குள்ளாக்குவதிலும் அதிக நேரம் செலவழிப்பாள்.

டீன் ஏஜ்ஜிற்கே உரிய குழப்பங் களையும், மனப்போராட்டங்களையும் புரிந்து கொள்வதற்கும் களைவதற்கும் அவள் முயற்சி செய்யும் காலம் இது. தன் உடலிலும், மனதிலும் நிகழும் மாற்றங்கள் அவளை குழப்பமடையச் செய்யும். இந்த நேரத்தில் நீங்கள் காட்டுகின்ற எந்த அதீதமான அக்கறையும் தேவையற்றதாகவே அவளுக்குப் படும். அவள் அந்தரங்கத்தில் மூக்கை நுழைப்பதாகவே அவளுக்குத் தோன்றும்.

ஆனால் மகளுக்கும் உங்களுக்கும் இடையில் எழுந்த தடுப்புச் சுவர் எதனால் உருவானது என்கிற குழப்பத்தில் நீங்கள் இருப்பீர்கள். தன் அந்தரங்க உணர்வுகள், எண்ணங்கள் சிக்கல்கள் ஆகியவற்றை பற்றி உங்களுடன் கலந்துரையாடுவதை உங்கள் மகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொள்ளுவாள். இந்தப் போக்கு உங்கள் குழப்பத்தை மேலும் அதிகரிக்கும்.. அதுமட்டுமல்ல அவள் தொடர்பான சிக்கல்களை களைய முடியாமல் திண்டாடுவீர்கள். நாம் ஒரு சிறந்த அப்பாவாக இல்லையோ? எனும் ஐயங்கள் உங்களை அலைக்கழிக்கும். இந்த சிக்கல்கள் பிள்ளைக்கும், பெற்றோர்க்கும் இடையிலான இடைவெளியை அகலப்படுத்தும்.

அச்சங்களும், ஐயப்பாடுகளும் நிறைந்த டீன்-ஏஜ் பருவம்:-

பொதுவாகவே டீன்-ஏஜ் பருவத்தைச் சேர்ந்தவர்கள், தன்னம்பிக்கையை குறைவாகக் கொண்டிருப்பார்கள். தம்மில் தோற்றத்தில் நிறைய குறைகளைக் காண்பார்கள். இத்தகைய அச்சங்களும், ஐயப்பாடுகளும் கொண்டவர் களிடம் பழகுவது சிக்கலான காரியம் .சாதாரணமாக நாம் சொல்லுகிற சொற்களை திரித்து அர்த்தப்படுத்திக் கொள்கிற போக்கு இந்த கால கட்டத்தில் மிகுந்திருக்கும்.

ஏறக்குறைய எல்லா உறவுமுறையினரிடமும் இந்தக் குளறுபடி இந்தாலும், பெற்றோர்க்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இப்படிப்பட்ட கருத்து முரண்பாடு ஏற்படுமானால், அது இருசாரார்க்கும் மிகுந்த மனவேதனையை உண்டாக்கும்.

தன் கட்டளைகளை பிள்ளைகள் மீறும்போது தன் அதிகாரத்தையே அவர்கள் தட்டிக் கேட்பதாக அப்பாவுக்குத் தோன்றும் ஏன் தந்தை என்கிற தன் நிலையையே அவர்கள் உதாசினப்படுத்துவதாக நினைப்பீர்கள். ஒரு அப்பாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது.

சின்ன வயதில் எந்தப் பெண் குழந்தையும் தன் அப்பாவிடம் மிகவும் பாசமாக இருக்கும். அவரை ஆராதிக்கும் இந்த பாசத்திற்கும், ஆராதனைக்கும் பழக்கப்பட்டுபோன ஒரு தந்தையால் தன் டீன்-ஏஜ் மகளின் கலக்கத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது தானே.

தாய்-மகள் உறவு முறை என்பது தகப்பன் - மகள் உறவு முறையிலிருந்து மிகவும் மாறுபட்டது.

டீன் -ஏஜ் பருவத்தில் எந்த ஒரு பெண் பிள்ளையும் தன் தாயிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது இயல்பு. தந்தையுடன் பகிர்ந்துக்கொள்ள இயலாத அச்சங்களையும், ஐயப்பாடுகளையும் தாயுடன் பகிர்ந்துக் கொள்கிறாள்.

தாயுடன் ஒட்டுதலாக இருக்கின்ற மகள் தன்னுடன் அப்படி இல்லையே என்று தந்தை ஏங்குகிறார். விலக்கி வைக்கப்பட்டது போல் உணருகிறார். இன்னொரு கருத்து கூட இதை மேலும் சிக்கலாக்குகின்றது.

கண்ணோட்டத்தில், பார்வையில், தம் மகள் எப்பொழுதும் குழந்தையாகவே தென்படுகிறாள். அவள் வளர்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை உணரத் தவறி விடுகிறார். டீன்-ஏஜ் மகளின் ஒவ்வொரு புதிய பழக்கமும் - மகளைப் பற்றி தன் மனதில் தான் பதித்து வைத்திருக்கும் படிமத்திற்கு முரணாக இருப்பதால் அவரை வெறுப்பேற்றுகிறது.

இந்த சூழ்நிலையில் தாய் என்கிற முறையிலும் மனைவி என்கிற முறையிலும் பெண்களுக்கு பெரிய கவலை ஏற்படும், சச்சரவுகளை தவிர்க்கும் பொருட்டு, அப்பாவும் மகளும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதையும் தவிர்க்கத் தொடங்குவர். வீடே ஒரு போட்டிக் களமாகக் காட்சியளிக்கும்.

“என் விருப்பப் படித்தான் நடப்பேன்” என அடம் பிடிக்கும் டீன் – ஏஜ் மகளுக்கும். குடும்பத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனையும் அப்பாவுக்கும் இடையில் நடக்கின்றன போட்டி, வீட்டை அல்லோல கல்லோலப் படுத்திவிடும். இவர்கள் இருவருக் கும் நடுவில் ஒரு சமாதான உடன்படிக்கையை ஒரு பெண்ணால் தாயால் ஏற்படுத்த முடியுமா?

அப்பா-தன் மகளிடம் அவ்வளவு கோபம் கொள்வதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள். குறிப்பாக எதைப் பற்றி அவர் நச்சரிக்கிறார்? அது புதிதாக உருவான ஒன்றா? அல்லது அப்பா மகளிடம் நெடுங்காலமாகவே குறை காணும் அம்சமா?

குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கூட்டுங்கள் (Family Meeting) குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்துங்கள். ஒவ்வொருவம் எந்த குறுக்கீடுமின்றி ஐந்து நிமிடம் பேச வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள்.

தங்கள் மனதில் குமைகின்ற மனக்குறைகள் பற்றியும் அவற்றுக்கான மூல காரணங்கள் பற்றியும் விளக்கச் சொல்லத் தூண்டுங்கள்.

“ நம் உணர்வுகளை நம் குடும்பத்தினர் அனைவரும் செவிமெடுத்து கேட்கிறார்கள்” என்கிற எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுவது மிகவும் முக்கியம்.

தனிப்பட்ட மனக்குறைகள் இல்லாத குடும்ப உறுப்பினர்களும், இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம். தனிப்பட்ட மனக்குறைகள் இல்லாத போதும் வீட்டில் நிலவும் உளைச்சலும் நிம்மதியின்மையும் அவர்களையும்தானே பாதிக்கும்?


குடும்பத்தினர் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை அப்பொழுது வகுத்துக்கொள்ளுங்கள். இத்தகைய விதிமுறைகள் ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பது அவசியம். குறிப்பாக பின்வருவன பற்றிய விதிமுறைகளை வகுத்துக்கொள்வது நல்லது.

வீட்டு வேலைகள், எதிர்பார்ப்புகள், வீட்டில் இருக்க வேண்டிய நேரம், வீட்டுப் பாடம் செய்ய வேண்டிய நேரம், தொலைக்காட்சியை யார் எவ்வளவு நேரம் பயன்படுத்துவது என்கிற அட்டவனை, விடுமுறை நாட்களைப் பற்றிய விதிமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும். பொதுவான வரையறைகள் போன்ற இதர பலவற்றைப் பற்றியும் சில முக்கியமான வீட்டு விதிகள்:

1) வீட்டுப் பாடங்களை செய்து முடிக்கின்ற வரை தொலைக்காட்சி கிடையாது.


2) நச்சரித்தல் கிடையாது - உரையாடல்கள்தான்.
 

3) இன்னொருவர் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கையில் யாரும் குறுக்கிடக்கூடாது.
 

4) பத்து மணிக்கு மேல் தொலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது.
 

5) சமைப்பதிலும் உணவு பரிமாறுவதிலும் எல்லோருக்கும் உதவ வேண்டும்.
6) அவரவர் பொருட்களை அவரவர் தான் பராமரித்துக்கொள்ள வேண்டும்.
 
ஒருவருடைய குணாதிசயத்தை இன்னொருவர் மாற்றியமைக்க முடியாது என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டு பொறுப்பு மிக்கவர்களாக வளர்ந்தால் அது குடும்ப கட்டமைப்பிலே ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

அப்பாக்கள் தங்களின் அதிகாரத்தை அவ்வப்போது தளர்த்திக் கொள்ளல், குடும்பத்தில் சமாதானத்தை நிலைநாட்ட வழிவகுக்கும், உங்கள் பிடிவாதங்கள் அனைத்தையும் மறுபடியும் ஒருமுறை பரிசீலியுங்கள். உங்களுக்கு இன்றியமையாததாக தோன்றும் சில உண்மையில் முக்கிய மற்றதாக இருக்கக்கூடும் எடுத்துக்காட்டாக உங்கள் பெண் விரும்புகிற வரையில் தொலைபேசியில் பேச அனுமதியுங்கள். இந்த விட்டுக் கொடுக்கும் அணுகுமுறை உங்கள் டீன்.ஏஜ் மகளை சிந்திக்க வைக்கும். வழக்கமாக சண்டை பிடிக்கும் அப்பா இவ்வளவு நேரம் பேசியும் அமைதியாக இருக்கிறாரே? என்று வியப்புறுவாள்.

காலப்போக்கில் உங்கள் மீதும் உங்கள் தேவைகளின் மீதும் அவளுக்கு மரியாதை கூடும். என்னதான் டீன்-ஏஜ் பருவத்தை எட்டிவிட்டாலும், உங்கள் அன்புக்காகவும், உறவுக்காகவும் ஏங்கும் குழந்தையாகவே மனதளவில் அவள் இருக்கிறாள். குடும்ப உறவு பிணக்குகள் கொண்டதாக இல்லாமல் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இருப்பதையே அவளும் விரும்புகிறாள். பிடியை கொஞ்சம் தளர்த்த வேண்டும் என்றவுடன் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் அறவே கவனம் செலுத்தாமல் இருப்பது என்று நினைத்துவிடக்கூடாது. அதிகமாக தலையிடாமல் அவள் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டுக் கொண்டே இருக்கவேண்டும். உலகத்தை எதிர்கொள்வதற்கான வயது, பக்குவமும் ஒரு டீன்-ஏஜ் பெண்ணிடம் இருக்காது. உங்கள் அறிவுரையும் வழிகாட்டுதலும் அவளுக்குத் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும்.

டீன்-ஏஜ் பருவம் என்பது பரிணாமவளர்ச்சியை குறிக்கிறது. பார்க்காததைப் பார்க்கவும். கேட்காததைக் கேட்கவும் ஆவல் மேலிடுகிறது. சில சமயங்களில் இந்த ஆவல் உணர்ச்சியே உங்கள் டீன்-ஏஜ் பிள்ளையை சிக்கலில் மாட்டியும் விடுகின்றது. அதனால் அவள் வாழ்க்கையில் நீங்கள் பங்கு பெறுவது முக்கியம்.

மகளின் நண்பர்கள் வீட்டிற்கு வரும்போது அவர்களுடன் கலந்துரையாடுங்கள். உங்கள் மகளின் நட்புவட்டம் எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவும். டீன்-ஏஜ் பருவத்தில் நிகழும் இன்னொரு முக்கியமான வளர்ச்சி. மொட்டுவிடும் பாலியல் உணர்வு . இந்த பாலியல் உணர்ச்சியை முழுவதும் புரிந்துக் கொள்ள முடியாமல் உங்கள் மகள் தடுமாறும் காலம் இது. இந்த தடுமாற்றத்தின் விளைவாக உங்களைக் கூட அவள் தவிர்க்க விழைவாள். சிடுசிடுப்பாகவும், முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்ளத் தொடங்குவாள்.

இந்த நேரத்தில்தான் நீங்கள் மிக அனுசரனையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பது கடினம்தான். எனினும் இந்த அனுசரணையின் பயனைத் தெரிய வரும் போது பெரும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

உங்களை எதிர்த்துப் பேசிக் கொண்டும். முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டும் அவள் வலம் வருகின்ற நேரங்களை விட, தன் பொறுப்பை மறவாமல் அவள் சில வேலைகளைச் செய்யக்கூடும். அவை மிகச் சிறிய செயல்களாகவும் இருக்கலாம். எனினும் நீங்கள் அவற்றை மறக்காமல் பாராட்ட வேண்டும். அதிக அலட்டல் இல்லாமல் சாமர்த்தியமாக பாராட்டுங்கள்.

தொலைபேசியை எடுத்து காதில் வைத்துக்கொண்டால் முடிவில்லாமல் பேசுகின்ற ஒரு டீன் – ஏஜ் இளம் பெண்ணை எனக்கு தெரியும். அவள் தேர்வுகள் நெருங்கி வந்துவிட்டால் பாடப்புத்தகங்களில் மூழ்கிவிடுவாள். தோழி களுடன் கதையடிப்பதில் நாட்டம் மிகுந்த வளாக இருப்பினும். தன் கடமைகளில் அவன் ஒருபோதும் குறை வைப்பதில்லை இதனால் அவள் தந்தைக்கும் மகிழ்ச்சி தொட்டதற்கெல்லாம் மகளை அவர் கடிந்துக்கொள்வ தில்லை. தொலைபேசியில் விடாமல் பேசிக்கொண்டிருந்தால் மட்டும் எப்பொழுதாவது நேரம் போவதை சுட்டிக் காட்டுவார். அவ்வளவுதான்.

டீன்-ஏஜ் பருவத்தில் உணர்வுகளை வெளிப்படுத்த உங்கள் மகள் சங்தேக மொழியைக் கைக்கொள்வாள். தன் எண்ணங்களை நாசுக்கான குறிப்புகள் மூலம் தலையைச் சுற்றி மூக்கைத்தொடுவாள்; இந்த மாதிரி தருணங்களில் எந்த ஒரு அப்பாவுக்கும் அறிவுரைகளை வாரி வழங்கிடத்தான் மனம் துடிக்கும். அவசரப்பட்டு விடாதீர்கள் இலேசாக மனம் திறந்து காட்டியிருக்கின்ற உங்கள் மகள் அதை மறுபடியும் பட்டென மூடாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் புத்திசாலித்தனமா நடந்து கொள்ள வேண்டும். உங்கள் மகள் சுற்றி வளைக்காமல் நேரடியாக கேள்வி கேட்பாளேயானால் நீங்களும் அவ்விதமாகவே பதிலளிக்க வேண்டும்.

கூச்சப்பட்டுக் கொண்டு சுற்றி வளைத்தால் உங்கள் பதில்கள் அதற்குத் தக்கவாறு அமைய வேண்டும். இந்த நேரத்தில் போய் சொற்பொழிவு செய்து கொண்டு இருப்பீர்களேயானால் அவள் மறுபடியும் உங்களிடம் ஆலோசனை கேட்டு வராமலேயே போகக்கூடும். எந்த நேரத்தில் எந்த விதமாக பேச வேண்டும் என்பதை புரிந்துக் கொண்டு பேசினால், உங்கள் டீன்-ஏஜ் பெண்ணுக்கும் உங்களுக்கும் இடையிலான உறவு கெட்டிப்படும்; ஆழப்படும்.

VLC மீடியா பிளேயர்: புதிய பதிப்பு ! தரவிறக்கம் செய்ய

VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு மிகப் பிரபலமான மென்பொருளாகும். நம் விண்டோஸ் கணினியில் விண்டோஸ் மீடியா பிளேயர் நிறுவப்பட்டு இருக்கும். 

ஆனால் அதில் நிறைய வீடியோ போர்மட்டுகளை பார்க்க முடியாது. அதற்கு codec நிறுவ வேண்டும். இந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோகப்படுத்துகிறோம். இதில் பெரும்பாலான போர்மட்டுகளில் வீடியோக்களையும், ஓடியோக்களையும் கண்டு ரசிக்கிறோம். 

இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.8 வந்துள்ளது. ஆகவே இதன் முந்தைய பதிப்பான 1.1.7 உபயோகிப்பவர்கள் இந்த புதிய பதிப்பை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடியுங்க

நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ்டாக, ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி ஆராய்ந்தனர். தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனிகளில் அடைப்புகளை கரைந்து ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது. அதன்மூலம், உடலில் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.

எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம், தலைசுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. அத்துடன், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் தண்ணீர் உறுதிப்படுத்துகிறது. அன்றாட வேலைகளின்போது ஏற்படும் சக்தி இழப்பை குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுபற்றி வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மைய பேராசிரியர்கள் கூறுகையில்,

‘‘ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை தண்ணீர் ஏற்படுத்துவதும், நரம்பு மண்டலத்தை உறுதியாக்குவதும் தெரிய வந்துள்ளது. இந்த பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது’’ என்றனர்.

விண்டோஸை விட லினக்ஸ் ஏன் சிறந்தது?

  • லினக்ஸ் இயங்குதளம் முற்றிலும் இலவசமாகும் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 
  • வைரஸ் பிரச்சனைகள் கிடையாது.  மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய முதன்மை அலுவலர் Steve Balmer கூறுகிறார் வைரஸ் தாக்குதலை முற்றிலுமாக விண்டோஸ் இயங்குதளத்தில் ஒழிக்கமுடியாது என்று.
  • விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ளது போன்று Spyware தாக்குதல்கள் லினக்சில் கிடையாது.
  • லினக்ஸ் இயங்குதளங்கள் Crash ஆகாது.
  • லினக்ஸ் இயங்குதளத்தின் கோப்பு நிர்வாகம் மிகவும் வலிமையாக உள்ளது. அதனால் லினக்ஸ் இயங்குதளத்தில் Defragmentation செய்ய வேண்டிய அவசியமில்லை.
  • புதிய வன்பொருள்களை கணினியில் இணைத்தால் கணினியை மறுதொடக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
  • லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தினால் License பற்றி கவலைப்படத் தேவையில்லை. 
  • லினக்ஸ் இயங்குதளத்தினால் 100 க்கும் மேற்ப்பட்ட File System (FAT32, NTFS, EXT3, EXT4, EXT2, VFAT etc...) படிக்க முடியும்.  விண்டோஸ் இயங்குதளத்தினால் அதனுடைய இரண்டு File System (FAT, NTFS) ஆகியவற்றை மட்டுமே படிக்க முடியும். 
  • விண்டோஸ் இயங்குதளத்தை Primary Partition -  ல் மட்டுமே நிறுவமுடியும்.  லினக்ஸ் இயங்குதளங்களை Logical Partition & லும் நிறுவ முடியும்.
  • லினக்ஸ் இயங்குதளங்கள் PAD, CELL PHONES, SUPER COMPUTERS ஆகியவற்றிலும் இயங்குகிறது.
  • லினக்ஸ் இயங்குதளங்களை உங்களுடைய நபர்களுடன் பகிரிந்து கொள்ளலாம்.  ஆனால் விண்டோஸ் இயங்குதளங்கள், அதன் மென்பொருள்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டால் அது சட்ட விரோதமாகும்.
  • லினக்ஸ் இயங்குதளங்களை கணினியில் நிறுவாமல் நிகல் வட்டாக(Live CD) பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • லினக்ஸ் இயங்குதளங்கள் இருப்பியல்பாக virtualization (XEN/KVM/VirtualBox/etc..) மென்பொருள்களுடன் வருகிறது.  இதன் மூலம் பல இயங்குதளங்களை லினக்ஸ் இயங்குதளத்தின் உள்ளேயே நிறுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • லினக்ஸினுடைய  Kernal நிறைய வன்பொருள்களுக்கான Driver களுடன் வெளியிடப்படுகிறது.  ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் நீங்கள் Driver CD தனியாக வைத்திருக்க வேண்டும்.
  • லினக்ஸ் இயங்குதளங்கள் ஆயிரக்கணக்கான உள்ளூர் மொழிகளிலும் வெளிவருகிறது.  உங்களுடைய மொழியிலும் நீங்கள் லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • லினக்ஸ் உங்களுக்கு முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது.
  • விண்டோசில் இருந்து லினக்ஸ்க்கு மாறுவதற்கு முக்கியத் தடையாக இருந்து வந்த பிரச்சனை தீர்க்கபட்டு வருகிறது.  அதன் முதல் படியாக விண்டோசில் உபயோகப் படுத்தப்படும் சில சாப்ட்வேர்களை இப்போது லினக்ஸ் இயங்குதளத்திலும் பயன்படுத்த முடியும்.  அதற்காக ஒரு சாப்ட்வேர்  உள்ளது அதன் பெயர் WINHQ இதற்க்கான லிங்க் இதோ.
  • பரவலாக பயன்படுத்தப்படும் லினக்ஸ் இயங்குதளம் உபுண்டு அதற்க்கான லிங்க் இதோ.

பயர்பொக்ஸ் 5 புதிய வசதிகளுடன் அறிமுகம்

நாம் இணையத்தை பயன்படுத்த நமக்கு உதவி புரிவது பிரவுசர்களாகும். நிறைய பிரவுசர்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படுவது பயர்பொக்ஸ் உலவியாகும்.
இதில் பயர்பொக்ஸ் பிரவுசர் இரண்டாவது மிகப்பெரிய பிரவுசராகும். முதலிடத்தில் இருப்பது IE ஆகும். விண்டோஸ் கணணி வாங்கும் போதே இந்த IE பிரவுசரை நிறுவி கொடுப்பதால் தான் இந்த உலவி முதல் இடத்தில் உள்ளது. இல்லை என்றால் பயர்பொக்ஸ் தான் முதலிடத்தில் இருக்கும்.
சென்ற மாதம் தான் பயர்பொக்ஸ் 4 வெளியிடப்பட்டு இணைய தரவிறக்கத்தில் சாதனை நிகழ்த்தியது. இதுவரை இந்த பயர்பொக்ஸ் 4 உலவியை 112,923,144 பேர் தரவிறக்கம் செய்து உள்ளனர்.
வெளியிட்ட குறைந்த நாட்களிலேயே அதிகமானவர்களால் தரவிறக்கம் செய்யப்பட்ட இந்த மென்பொருள் தற்போது மேலும் பல வசதிகளை மேம்படுத்தி தனது புதிய பதிப்பான பயர்பொக்ஸ் 5 வெளியிட்டுள்ளது. ஆனால் இது முதலில் சோதனை(Beta) ஓட்டமாகவே விடப்பட்டுள்ளது.
இதன் வசதிகள்:
1. Firefox: விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா உபயோகிப்பவர்கள் பயர்பொக்சின் பிரவுசரில் உள்ள பட்டன்கள் புதிய மற்றும் சிறந்த தோற்றத்தை காட்டுகிறது.
2. HSTS: இந்த பயர்பொக்ஸ் 5ல் HSTS Protocol உதவியுடன் நம் பிரவுசரில் பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இணைய திருடர்களிடமிருந்து நம் கணணி பாதுகாக்கப்படுகிறது.
3. Audio API: இணையத்தில் இருக்கும் மீடியா கோப்புகளை கையாள புதிய வசதியை கொடுத்துள்ளது.


வெற்றியின் நோக்கம்

விளையாடும் விளையாட்டிலிருந்து செய்கின்ற வேலை வரையிலும் வெற்றியை விரும்பாதவர் எவருமில்லை, நான்கு கடைகளுக்கு நடுவில் ஒரு கடையை அமைத்து, மற்ற கடைகளை விடவும் வியாபாரம் அதிகமாக நடைபெற்றால், அதைவிட சந்தோசம் வேறு எதுவும் இருக்க முடியாது. நாற்பது மாணவர்கள் இருக்கும் வகுப்பில் ஒருவன் மட்டும் அதிக மதிப்பெண்கள் எடுத்து, வெற்றியடைந்தால் அவனுக்கு அதை விடவும் வேறு சந்தோசம் இருக்க முடியாது.

ஊர் பசங்க எல்லாம் கண் வைத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணானவள் அதில் ஒருவனுக்கு மட்டும் பச்சைக்கொடி காட்டினால் அந்த வெற்றிக் களிப்பை விடவும் வேறு ஒரு மகிழ்ச்சி அவனுக்கு இருக்க முடியாது. இப்படி வெற்றி என்பது அனைவரும் விரும்பும் ஒரு பரவசப் பொருளாகும். நாம் அனைவரும் ஏதோ ஒரு வெற்றியை எதிர்பார்த்துதான் எதையாவது செய்து கொண்டிருக்கிறோம். அடுப்பில் தீ வைப்பவள் சோறு பொங்கும் போது வெற்றியை காண்கிறாள், ஆற்றில் மீன் பிடிப்பவன் மீன் சிக்கும்போது வெற்றியை காண்கிறான்.

இப்படி சின்ன விசயங்களிலும் வெற்றி வரும்போது தான் மகிழ்ச்சியும், சந்தோசமும் வருகிறது, சிலருக்கு வெற்றியை எதில் காண வேண்டும் என்றே தெரியாது, இரண்டு மனிதர்கள் வாய்ச்சண்டை போட்டுக் கொள்ளும் போது, யார் பேச்சை நிறுத்துகிறார்களோ அவர் தோற்று விட்டதாக நினைத்துக் கொள்வார்கள், அப்படியானால் வெற்றி பெறுவதற்கு தாறுமாறான வார்த்தைகளை பேசத்தெரிந்தாலே போதுமா! அப்படியானால் அவர்கள் நோக்கத்திற்கான கீழ்தரமான வெற்றியே கிடைக்கும்.

வெற்றியின் நோக்கம் உயர்வாக இருக்க வேண்டும், நாம் பிரமிப்படைவர்களாக மட்டுமல்ல, பிரமிப்படைய வைப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அதற்காக ஆகாயத்தில் கோட்டை கட்ட கூடாது, அந்தரத்தில் தோட்டம் போடக்கூடாது, தண்ணீரிலே கோலம் போடக்கூடாது நடக்க வேண்டிய காரியங்களையே செய்ய வேண்டும். வானத்தை நோக்கி பறப்பதற்கு முன்னால் பூமியில்தான் பிறந்தோம் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

வெற்றியின் வீரியத்தை அதிகப்படுத்துவதற்கு ஒரு வழி இருக்கிறது! ''நாம் கட்டி வைத்திருக்கும் கோட்டையை இடித்து விட்டு புதிய கோட்டையை கட்டுவதுதான் அந்த வழி'' ஒன்றை இடிக்காமல் அதே இடத்தில் இன்னொன்றை கட்ட முடியாது. பகலெல்லாம் டிவி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை இடிக்காமல் புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற புதிய பழக்கத்திற்கு நம்மை தயாராக்கிக் கொள்ள முடியாது. விடிந்த பிறகும் தூங்க வேண்டும் என்ற எண்ணத்தை இடிக்காமல், காலைதோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க முடியாது.

தன்னை மாற்றங்களுக்கு பழக்கிக் கொள்பவனால்தான் எவ்வித வெற்றியையும் அடைய தயாராகிக்கொள்ள முடியும். நாம் தூங்கும் அதே இடத்தில்தான் தினமும் தூங்க வேண்டும் என்பதில்லை, ஒருநாள் படுக்கையறையில் தூங்கினால் இன்னொரு நாள், சமையலறையில் கூட தூங்கலாம். மாற்றங்களே மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும், மாற்றங்களே வெற்றியின் உணர்வுத் தூண்டுதல்களாக செயல்பட்டு விரையத் தூண்டிவிடும்.

நாமோ எதை கட்டி வைத்திருக்கிறோமோ அந்த வரைமுறையை இடிக்க சிறிதும் தயாராவதில்லை, மெத்தையில்தான் தூங்குவேன் என்றால் ஏன் இன்று தரையில் தூங்கிப் பார்க்கலாமே! அது புதிய மகிழ்ச்சியாக இருக்குமே! என்று எவரும் நினைப்பதில்லை, ஒருநாள் வீட்டில் குளித்தால், ஒருநாள் ஆற்றில் குளியுங்கள், ஒருநாள் குளத்தில் குளியுங்கள், எது நல்லது என்று ருசி பார்த்து அதை மட்டுமே செய்து கொண்டிருந்தால் அதுவே நீங்கள் கட்டி வைத்த கோட்டையாகிவிடும். பின்னர் அதை இடிப்பது சிரமம்.

புடிச்சாலும் புளியங்கொம்பை தான் புடிப்பேன் என்று ஒன்றை மட்டும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால், உங்கள் நோக்கமும் அதற்குள்ளேயே சுருண்டு கிடந்து வியாகுலப் பட்டுக் கொண்டிருக்கும். மாறிவரும் உலகில் மாற்றங்களுக்கும் தயாரானால் தான் புதிய வெற்றியின் புதிய பாதையை அமைத்துக்கொள்ள முடியும். நீங்கள் தொங்கிக் கொண்டிருப்பது நிஜமாகவே உயர்வானதுதான் என்றால் பரவாயில்லை, அதுவே பலமிழந்து கொண்டிருந்தால் விழுவதற்குள் கட்சி மாறிவிடுங்கள் நிச்சயம் ஒரு புதிய வெற்றிக்கொடியை நாட்டி வைக்க முடியும்.
 

2012 இல் வெளிவரும் விண்டோஸ் 8

விண்டோஸ் 8 இயங்குதளமானது (Operating System) 2012 இல் வெளியிடப்படு மென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது. இது தொடர்பான செய்தியை மைக்ரோசொப்ட் தனது  டச்சு மொழி வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.

 இறுதியாக மைக்ரோசொப்ட் தனது விண்டோஸ் 7 இயங்குதளத்தினை 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது. விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே விண்டோஸ் 7 ஆகும். அண்மையில் அப்பிள் தனது மெக். ஒ.எஸ் எக்ஸ் 10.7 லயன் (Mac OS X 10.7 Lion) இயங்குதளத்தினை வெளியிட்டிருந்தது. மேலும் இதில் அப்பிளின் அப் ஸ்டோர் (App Store) போன்ற வசதியையும் அப்பிள் உள்ளடக்கியிருந்தது.

 மைக்ரோசொப்டும் இது போன்ற வசதியினை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விண்டோஸ் 7 ஐப் போல விண்டோஸ் 8 உம் பல புதிய மாற்றங்களை உள்ளடக்கியிருக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தற்போது மைக்ரோசொப்ட், விண்டோஸ் போன் 7(Windows 7 mobile) மற்றும் எக்ஸ் பொக்ஸ் 360 இக்கான கைநெக்ட்(kinect) மோசன் சிஸ்டம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றம

  கோலா பானங்களால் ஏற்படும் அபாயம்

கோலா பானங்களை அதிகம் எடுத்துக் கொள்வதால், உடலில் பொட்டாசியம் சத்து கடுமையாக குறைகிறது என்றும், எலும்பு தே‌ய்மானமும் ஏற்படுகிறது என்றும் கிரீஸில் உள்ள லோவானிய பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

இந்த ஆய்வுபற்றிய அறிக்கை, 'இன்டெர்னேஷனல் ஜர்னல் ஆஃப் கிளினிகல் பிராக்டீஸ்' (IJCP) என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு இரண்டு புட்டிகள் கோலா பானங்களை அருந்தினால் பல் தொடர்பான நோய் ஏற்படுவதாகவும், எலும்புத் தேய்மானம் அதிகரிப்பதாகவும், மேலும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படும் இருதயம் தொடர்பான பிரச்சனைகளும் சர்க்கரை வியாதியும் ஏற்படும் அபாயமும் உள்ளது என்று ஆய்வில் ஈடுபட்ட மோசஸ் எலிசாஃப் கூறுகிறார்.

மேலும் அதிகமாக கோலா பானங்களை அருந்துவதால் உடலில் உள்ள பொட்டாசியம் அளவு குறைந்து தசை, எலும்பு தொடர்பான செயல்களில் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என்று எச்சரிக்கை செய்கிறார் அவர்.

நாளொன்றுக்கு இரண்டு முதல் 10 புட்டிகள் கோலா அருந்தும் நபர்களை ஆய்வு செய்துள்ளனர். இதில் இரண்டு கருத்தரித்த பெண்களும் உண்டு. இதில் 21 வயது நிரம்பிய பெண்மணி நாளொன்றுக்கு 3 புட்டிகள் வரை கோலா அருந்துவது தெரிய வந்துள்ளது. இதனால் அவருக்கு அடிக்கடி வாந்தி, கடுமையான அசதி, பசியின்மை போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னொரு நோயாளி 10 மாதங்களில் நாளொன்றுக்கு 7 புட்டிகள் கோலா அருந்தி வந்தவர். இதனால் அவரது தசைகளில் தேய்மானம் தொடர்ந்து நீடித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கோலா அருந்துவதை நிறுத்தியவுடன் உடல் நிலை தேறி வருகின்றனர். இந்த கருத்தரித்த பெண்மணிகளுக்கும் ஊசி மூலம் பொட்டாசியம் ஏற்றப்பட்டு உடல் நிலை தேரியதாக ஆய்வு தெரிவிக்கிறது.

தசை, நரம்புகள், இருதயம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் பொட்டாசியத்தின் பங்கு அதிகம். இதன் அளவு குறைந்து கொண்டே வந்தால் வாதம், சீரற்ற இருதய துடிப்பு, ஏன் மரணம் கூட ஏற்படலாம் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

பொட்டாசியம் குறைபாடு காஃபைன், சர்க்கரை ஆகியவற்றால் கூட ஏற்படும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.