காவலன்

நான்கைந்து படங்கள் தோல்வியடைந்தால்தான் தாங்கள் செய்கின்ற தவறுகள் என்னென்ன என்பதை அந்தந்த ஹீரோக்கள் நினைத்துப் பார்ப்பார்கள் போலிருக்கிறது..

விஜய்யின் கேரியரில் தொடர்ச்சியான 5 படங்களின் தோல்விகளுக்குப் பிறகு வந்துள்ள ஒரு வெற்றிப் படம் இது. வசூலிலும், பெயரிலும் நிச்சயம் இது ஜெயமான படம்தான். இதில் சந்தேகமில்லை. விஜய்க்கு இன்னுமொரு காதலுக்கு மரியாதை..!



உண்மையாகவே ஒரு நிஜமான, அழகான காதல் கதை.. இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதற்கு விஜய்யை நிச்சயமாக பாராட்ட வேண்டும். விட்ட இடத்தை அதே பாணியில் மீண்டு வந்து கைப்பற்றியிருக்கிறார்.

இதன் ஒரிஜினலான பாடிகார்டு மலையாளப் படத்தில் திலீப், நயன்தாரா ஜோடி.. இதில் நயன்தாரா கல்லூரிக்குள் ஆடும் ஒரு நடனக் காட்சி மலையாள சேனல்களில் போன வருடம் முழுவதும் ஒளிபரப்பான பெருமை பெற்றது.. அசத்தல் மூவ்மெண்ட்ஸ் நயன்ஸ்.. முதல் முறையாக அந்தப் பாடல் காட்சியைப் பார்த்த பின்புதான் படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டு காத்திருந்து பார்த்து வைத்தேன்.

உணர்ச்சிகளின் குவியல்களை படத்தின் பிற்பாதியில் கொண்டிருந்த இப்படம் மலையாள மண்ணுக்கே உரித்தான வகையில் இருந்தது. தமிழ்ப்படுத்தும்போது செய்யும் சிற்சில நகாசு வேலைகளுடன் சொற்ப லாஜிக் மீறல்களுடன் வெளிவந்திருக்கிறது.

வெட்டியாக ஊரைச் சுற்றி அடிதடியில் இறங்கியிருக்கும் விஜய்யை  நல்வழிப்படுத்த தனது நண்பரான தேவகோட்டை மிராசுதார் ராஜ்கிரணிடம் அனுப்பி வைக்கிறார் விஜய்யின் தந்தை. ராஜ்கிரண் விஜய்யை முதலில் சேர்த்துக் கொள்ளவில்லை. ஒரு குண்டு வெடிப்பில் இருந்து தன்னைக் காப்பாற்றிய பின்புதான் விஜய் மீது பாசம் கொண்டு அவரை வீட்டுக்குள் விடுகிறார்.


ராஜ்கிரணின் மகளான அசின் சென்னையில் தங்கி கல்லூரியில் படிக்கப் போக.. மகளுக்குத் துணையாக விஜய்யையும், அவரது தொண்டர் வடிவேலுவையும் அனுப்பி வைக்கிறார். வந்த இடத்தில் விஜய்யின் பின் தொடர்தலும், அவரது அப்பாவித்தனமும் அசினுக்கு வெறுப்பேற்ற விஜய்யை அல்லல்பட வைக்க வேண்டி அசின் செய்யும் ஒரு சின்ன வேலை.. படிப்படியாக நிறுத்த முடியாத அளவுக்குத் தொடர்கதையாகிப் போய் அவர்களது வாழ்க்கையை எங்கயோ கொண்டு போய் முடிக்கிறது..

தொடர்ச்சியான பல்வேறு முடிச்சுகளுடன் கதையைப் பின்னியிருக்கிறார் இயக்குநர். படத்தின் முற்பாதியில் சிறிதளவு கலகலப்புடனும், எதிர்பார்ப்புடனும் சென்றாலும் பிற்பாதி முழுவதும் காதல் மயம்தான்.. ச்சும்மா கிடந்தவனை உசுப்பிவிட்டக் கதையாக அசின் செய்யும் காதல் கலாட்டா முதலில் காமெடியாக இருந்தாலும் போகப் போக சீரியஸாகிப் போய் நாமும் அதில் ஒன்றிவிட வேண்டியதாகிவிட்டது.

நான் ஏற்கெனவே மலையாளத்தை பார்த்துவிட்டதால் எதிர்பார்ப்பு இல்லை என்றாலும், விஜய்யின் கொஞ்சூண்டு நடிப்பு என்னை இருக்கையில் இருக்க வைத்திருந்தது. மனிதர் ஸ்கிரீனில் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறார். வெரி க்யூட்.. குளோஷப் ஷாட்டுகளை இவருக்காக நிறையவே வைக்கலாம்.. இப்போதெல்லாம் கொஞ்சம் பெரிதாகவே வாயைத் திறந்து வசனம் பேச ஆரம்பித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இதில் வசனங்கள் பரவாயில்லை.. புரிந்தது.. ஆனால் அசினின் டப்பிங் வாய்ஸ் அநியாயத்திற்கு கிசுகிசு பாணியில் போய் உற்றுக் கேட்க வேண்டியதாக இருந்தது.

ஹீரோ என்பதால் அவருக்காக வைக்கப்பட்டிருக்கும் முதல் சண்டைக் காட்சியையும், சிற்சில ஹீரோயிஸ ஷாட்டுகளையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் படம் சித்திக்கின் படம் போலத்தான் இருக்கிறது.

லாஜிக் குறைகளில்லாமல் இல்லை. முதல் காட்சியில் பார்த்த அம்மா யுவஸ்ரீயும், மாமா டெல்லிகணேஷும், அப்பா நிழல்கள் ரவியையும் அந்த ஒரு காட்சிக்குப் பின்பு காணவே இல்லை.. பாடிகார்டு என்றாலும் அப்படியொருவனை வைக்கும் அளவுக்கு ராஜ்கிரண் தேவகோட்டை பகுதியில் என்னென்ன சாதனைகளைப் படைத்திருக்கிறார் என்பதைக் காட்டவில்லை. ஆனால் அவருக்கென்று இருக்கும் ஒரேயொரு வில்லனை மட்டுமே காட்டி அவரால் ராஜ்கிரணுக்கு இருக்கும் பகைமையை உதாரணமாக்கியிருக்கிறார்கள்.

மலையாளத்தில் இந்த வில்லத்தனத்திற்கு சிறிதளவாவது பில்டப் இருந்தது. தமிழில் அது இல்லாததால் இப்படியொரு கேள்வி எழ வேண்டியதாகிவிட்டது..

விஜய்யின் நடிப்பபை பிற்பாதியில்தான் வெகுவாக ரசிக்க முடிந்தது.. அமைதியான நடிப்பை வழங்கும் விஜய்யை எரிச்சலாக்கும் வகையில் தொலைபேசியில் தொல்லை கொடுக்கும் காட்சியும், கிளாஸ் கட் என்று எரிச்சலுடன் கத்தும் விஜய்யின் நடிப்பு அந்த இடத்தில் பிடித்தமானது. நல்ல கோபம்.. யூ டியூப்பில் இப்போது பேமஸாக இருக்கும் விஜய்யின் ஒரிஜினல் கோபக் காட்சியைவிட இது மிகவும் உக்கிரமானது.

அதேபோல் காதலிக்காக அசினிடம் அவர்களது புரோகிராமை கேட்டுவிட்டு தனது புரோகிராமை பிக்ஸ் செய்ய நினைக்கும் சாதா நடிப்பு.. கல்லூரி வகுப்பில் மதன்பாப்பிடம் கேள்விக்குப் பதில் சொல்லும் தெனாவெட்டு.. லேடீஸ் டாய்லெட் வாசலில் பிரின்ஸியிடம் மாட்டிக் கொண்டு தவிப்பது.. கிளைமாக்ஸில் அடிபட்ட நிலையிலும் ராஜ்கிரணிடம் காட்டும் பவ்யத்தை விஜய் இதுவரையில் எத்தனை படங்களில் காட்டியிருக்கிறார் என்று தேடித்தான் சொல்ல வேண்டும்..


இதேபோல் அசினுக்கும் குறிப்பிடத்தக்க தமிழ்ப் படம் இது.. இளமைத் துள்ளலுடன் தசாவாதாரத்தில் பொங்கித் தீர்த்தவருக்கு ஏன் இத்தனை பஞ்சம் என்று தெரியவில்லை..? பாடல் காட்சிகளில்கூட கொஞ்சம்தான் திறமையைக் காட்டியிருக்கிறார். அதே சமயம், இத்தனை கண்ணீர்த் துளிகளை இதுவரையில் வேறெந்த படத்திலும் அசின் சிந்தியிருக்க முடியாது.. விஜய்யை ஏமாற்றுகிறோம் என்று கிண்டலாக ஆரம்பித்து அது போகப் போக சீரியஸாகி தன்னை அறியாமலேயே அவரை நேசிக்கத் துவங்கும் காட்சி படு யதார்த்தம்.. அந்த ஒவ்வொரு காட்சியிலும் அழுகையுடன் அசினை பார்க்கும்போது அவரது ரசிகர்களுக்கும் அழுகை வரும். ஆனால் இதனை விஜய் எதிர்கொள்ளும்விதமே படத்தை ரசிக்க வைத்தது.

வடிவேலுவின் வெடி காமெடிகள் இந்தப் படத்தில் சற்று அடக்கி வாசித்து சிற்சில இடங்களில் புஸ்வாணமாகவாகவும் போய்விட்டது.. காமெடிக்கு இடமில்லாமல் அதையும் விஜய்யே செய்துவிட்டதால் வெடிவேலுவின் வெங்காய வெடிகூட வெடிக்காதது வருத்தமானதுதான். பேருந்து கலாட்டாவும், ஏர்போர்ட் கலாட்டாவும் மட்டும்தான் ரசிக்கும்படி இருந்தது.. வேறொன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் கதையை நகர்த்த வடிவேலுவின் காதலி கேரக்டர் பயன்படுத்தப்பட்டிருப்பதால் ஓகே..

அம்மா கேரக்டரில் ரோஜாவும், யுவஸ்ரீயும் அவதரித்துவிட்டார்கள். ஏற்கெனவே தெலுங்கு நாடோடியில் கலக்கல் அரசியல்வியாதியாக துள்ளிக் குதித்திருக்கும் ரோஜாவுக்கு இங்கே ஜஸ்ட் சில சீன்கள்தான்..  ரோஜாவின் பேவரைட் சிரிப்பை காணாததால் பலரையும்போல் எனக்கும் பெரும் ஏமாற்றம்தான். யுவஸ்ரீயை அம்மாவாக்கியதைப் போல் இனி வரும் காலங்களில் சங்கவி, யுவராணி, ரூபஸ்ரீ, கீர்த்தனாவையும் விஜய் படங்களில் அம்மாவாக்கிவிட்டால் ஜென்மசாங்கல்யம் அடைந்துவிடுவேன்..!

அசினின் தோழி கேரக்டரின் ஒவ்வொரு எதிர்ப்பும், ஆக்ஷனும் நம்மையும் சேர்த்து கேள்வி கேட்க வைத்திருக்கிறது. ஆனால் ஆள்தான் எனக்குப் பிடிக்கவில்லை. மலையாளத்திலும் இந்தப் பெண்தான் நடித்திருந்தார் என்று நினைக்கிறேன். தமிழுக்கு இன்னமும் கொஞ்சம் பிடிமானமான ஆளாக போட்டிருக்கலாம்.

கல்லூரியில் நடனக் காட்சி வந்தபோது பாட்டு வரப் போகுதுடோய் என்பதைவிட விஜய்யின் நடனம் காண ஆவல் மேலிட்டது உண்மைதான். அந்த நளினம் இன்னமும் விஜய்யிடம் இருக்கிறது.. யாரோ பாடலிலும் பட்டாம்பூச்சி பாடலிலும் விஜய்க்காகவே ஸ்பெஷல் ஸ்டெப்ஸ் வைத்திருக்கிறார்கள்.. ஆனால் எனக்கு முதல் பாடல்தான் பிடித்தது. வேகம்.. வேகம்.. வேகம்... ம்.. இத்தனையிருந்தும் எனக்கு கில்லி மட்டும் ஏன் பிடிக்காமல் போனது என்றுதான் தெரியவில்லை..

'காதலுக்கு மரியாதை'யில் கே.பி.சி.பி.லலிதா “கூட்டிட்டுப் போங்க..” என்று சொல்லும் ஒற்றை வார்த்தைக்குத் தியேட்டரே அதிர்ந்ததைப் போல இந்தப் படத்திலும் ராஜ்கிரண் அதையே கிளைமாக்ஸில் சொல்கிறார். ஒற்றுமையை நினைத்துப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். எல்லாம் நன்மைக்குத்தான்.

இறுதிக் காட்சியில் இருக்கும் சாந்தசொரூபி விஜய்யும், கண்டு பிடித்துவிட்டானா என்பதைக்கூட அறியாத அசினும், சேர்த்து வைத்துவிட்ட திருப்தியோடு சிறுவனுமாக புகைவண்டி நம்மைக் கடக்கையில் ஒரு பீல் குட் லவ் ஸ்டோரியை பார்த்த திருப்தி..

இதே படம் ஹிந்தியில் 'மை லவ் ஸ்டோரி' என்ற பெயரில் தயாராகிறதாம். சல்மான்கான் ஹீரோ. கரீனா கபூர் ஹீரோயினாம். இயக்கம் சித்திக்தானாம்.. அங்கேயும் ஜெயிக்க வாழ்த்துவோம்..!

நீண்ட வருடங்கள் கழித்து நல்ல படத்தைக் கொடுத்திருக்கிறார் விஜய்.. அவசியம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம்.. மிஸ் பண்ணிராதீங்க..

0 Response to "காவலன்"

Post a Comment